Pages

Thursday, December 15, 2011

வற்றிவிட்ட காவிரி


வற்றிவிட்ட காவிரியாய் வாடுகிறேன் பூவிழியே!
பற்றற்று பாரினிலே பாவையுனைப் பாடிடவே!
கற்றுவிட்டேன் பாடமொன்று காதலது கானலென்று
நெற்றியிட்ட குங்குமமே நீங்காது நீவாழீ!

சிற்றிடையும் செவ்விதழும் செங்கமல பூமுகமும்
சுற்றிடுதே சிந்தையிலே சுட்டிடுதே என்னுயிரை
சுற்றமென்று நூறிருந்தும் சொந்தமென்று நீயின்றேல்
உற்றதுணை யாருமிலை உன்னையன்றி வாழ்வுமிலை

ஆவியாய் நின்றவளே அன்பூறும் பூவே
தேவியாய் எண்ணியே சிந்தை மகிழ்ந்தேனே
பாவியெனை பாராமல் பாவைநீ பிரிந்தாயே
மேவும் விரலின்றி வீணைக்கு ஒலியில்லை

ஒவியமே உன்னையே உள்ளத்தில் வைத்தேனே
காவியங்கள் பாட கருவாய் நினைத்தேனே
சாவிலும் நம்காதலே சத்தியமாய் வெல்லுமென்று
கோவிலாய் நெஞ்சிலே கொலுவீற் றிருந்தாயே

பூமகளே புன்னகைக்கும் பொற்சிலையே பூங்காற்றே
நாமன்று திளைத்திருந்த நன்னாட்கள் போனதெங்கே
சோகமெனை வாட்ட துவள்கிறேன் நானினின்று
மேகங்கள் சூழ்ந்த வெண்ணிலவாய் வாடுகிறேன்

மாற்றமிலை என்னிடமே மன்னவா என்றாயே
காற்றாய் உயிர்பறவை காலனிடம் போகயிலும்
மாற்றான் மனதில் மலர்ந்தாயே மல்லிகையே
தோற்றம் சிதைந்து துயிலிழந்தேன் பாரம்மா

அரும்பிய காதலை அன்பே அழித்தாயே
விரும்பிய யென்னை வெறுத்தே பிரிந்தாயே
துறவறம் பூண்டு துயருற வைத்தாயே
கரும்பாய் இனிக்கட்டும் கண்ணேயுன் வாழ்க்கை

ஏன்நீ எனைப்பிரிந்தாய் என்னுயிரே இளையவளே
தேனிலவு தேய்வதுபோல் தேகமது தேய்கிறதே
மீன்விழிநீ யின்றிவிழிப் பூக்கள் நீராடுதே
ஊனினிறி உடலும் உயிரற்ற சவமானதே

கண்ணிரண்டில் கங்கைவெள்ளம் கண்ணீராய் ஓட
உன்னையெண்ணி நானே உலகை வெறுத்தேனே
என்னிதய சோலையிலே மிதந்துவரும் தென்றலே
என்றுனை காண்பேன் இனி.